breakfastlunchdinner

Thursday, September 20, 2007

காரக்குழம்பு

தேவை:

கடுகு: 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள்: அரை ஸ்பூன்
வெந்தயம்: 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள்:100கி
புளி: எலுமிச்சை அளவு
எண்ணெய் :100மிலி
உப்பு: தேவைக்கு...

செய்முறை:

முதலில் மூன்று டம்ளர் தண்ணீரில் புளியை ஊறவைக்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சுட்டதும் பெருங்காயத்தூளைப் போட வேண்டும். வெந்தயம் போட்டு லேசாய் வறுத்து, கடுகைப் போட்டு வெடிக்க விட வேண்டும். புளித்தண்ணீரை விட்டு அது சுட்டதும் மிளகாய் தூள் போட்டு கிளற வேண்டும். உப்புப் போட்டுக் கலந்து கொதி வந்ததும், கூடவே மணம் வந்ததும் இறக்கி விடலாம்.

குறிப்பு: இந்தக் காரக் குழம்பை மாதத்துக்கு இருமுறை அல்லது ஒருமுறை செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். உலகளாவ பரந்து கிடக்கும் சாப்ட்வேர் பிரம்மச்சாரிகள், பேச்சிலர்கள் இந்தக் குழம்பை செய்து மகிழலாம். பச்சரிசி புழுங்கலரிசி சாதங்களுக்கு நல்லாவே சேரும்.

துணைக்குறிப்பு: கடலை மடித்த காகிதமொன்றில் கிடைத்த குறிப்பு இது. எந்தப் பத்திரிகைக் காகிதம் என்று அறிய இயலவில்லை. மேலே உள்ள குறிப்பும் அதில் உள்ளதுதான்.

Monday, August 20, 2007

இறைச்சி ஈரல் பொரியல்

தேவையான பொருட்கள்:

நல்ல மட்டன் லிவர் 250 கிராம்.

சின்ன வெங்காயம் ஒரு கப்.

வெங்காயத்தாள் (வெங்காயச் செடியின் இலைச்சுருள்) நறுக்கியது அரைகப்.

கொத்துமல்லித் தழை பொடியாக நறுக்கியது சிறிதளவு.

மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சம் பழம், எண்ணெய்.


செய்முறை:

எண்ணெய் சூடானதும் முதலில் வெங்காயத்தை வதக்குங்க.

வெங்காயத்தாள் இட்டு பச்சை வாசனை மாறி வரும் வரை வதக்கணும்.

கொத்துமல்லித் தழை இட்டு வதக்கவும்

துண்டுகளாக நறுக்கிய ஈரல் துண்டுகளை அதில் இட்டு நன்றாக கிளறுங்க.

எலுமிச்சை சாறு சேர்த்துடுங்க.

தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்கணும்.

ஈரல் வேகும் வரை எண்ணெயிலேயே வதக்க வேண்டும்.

(எண்ணெய் அதிகம் சேர்க்க விரும்பாதவர்கள் முதலில் தண்ணீரில் பாதி வேகும் வரை வேக வைத்து வடிகட்டிச் சேர்க்கலாம்.)

இறுதியாக மிளகுத்தூள் இட்டு பிரட்டி...

வாசனை வந்ததும் இறக்கிப் பரிமாறலாம்.

குறிப்பு: 1. ஈரல் பொரியலுக்கு வெங்காயத்தாள் தனியான சுவை தரும். அது கிடைக்காதவர்கள் தக்காளி சேர்த்துக் கொள்ளலாம். பொடியாக நறுக்கிய தக்காளியை ஈரம் போக சுருள வதக்கிய பின்பே ஈரல் சேர்க்க வேண்டும்.

2. வழக்கமான இறைச்சி வாசனை தேவை எனில் முதலில் பட்டை, கிராம்பு தாளித்து தொடங்கலாம். அல்லது சிறிதளவு கரம் மசாலா சேர்க்கலாம். (வெங்காயத்தாள் சேர்த்து செய்யும் போது இவை தேவை இல்லை)

-oOo-

நேயர் விருப்பம்: சர்வேசன்.

படம் சேர்க்க வழியில்லை. செய்து பார்த்து படம் போடுங்க :)

Saturday, March 31, 2007

இஞ்சி மொரபா

தாத்தா வீட்டுக்கு போனப்போ சும்மா இருக்க முடியாமல் கோவை அவினாசிலிங்கம் ஹோம் சயின்ஸ் காலேஜ் ல ஒரு நாலு நாள் வகுப்பு எடுத்தாங்க அதுல சேர்ந்து ஜாம் ஜூஸ் செய்யக் கத்துக்கிட்டேன். ஒரு முறை எல்லாம் செய்தேன். அவ்வளவு தான். நோட்ட எங்கயோ வச்சிட்டேன் எடுத்துப்பார்த்தா இப்ப அதுல தண்ணி பட்டு நஞ்சு போய் அங்க இங்க எழுத்தெல்லாம் மறைஞ்சுட்டு இருக்கு.

இங்க எழுதன மாதிரி யும் இருக்கும் நினைவுபடுத்திக்கிட்ட மாதிரியும் இருக்கும் இல்லயா ? இதோ உங்களுக்காக இஞ்சி மரபா செய்வது எப்படி?

இஞ்சி 100 கிராம் .{ நானும் சித்தியும் உழவர் சந்தைக்கே போய் நல்ல இஞ்சியா பார்த்து வாங்கிவந்து செய்தமாக்கும் அன்னைக்கு}

சர்க்கரை 400 கிராம்

சிட்ரிக் அமிலம் {இது எவ்வளவு போடனும்ன்னு எழுதன இடம் சரியா தெரியல நியாபகமும் இல்ல பாத்து போட்டுக்குங்க ஒரு ஸ்பூனா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.}

நார் இல்லாத இஞ்சியாக எடுத்து , தோலை சீவி அதை துருவி வச்சுக்கோங்க. அதில் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைங்க.

அப்புறமா அதை மிக்ஸ்யில் போட்டு அரைச்சுக் கோங்க.

சர்க்கரையில் சிறிதளவு தன்ணீர் ஊற்றி சிட்ரிக் அமிலம் சேர்த்து கம்பி
பதம் வரும் வரை காய்ச்சி தயாரித்து வைத்து இருக்கும் இஞ்சிக் கூழை சேர்த்து
நன்கு கிளறவும். பதமா வரும் {இந்த பதமெல்லாம் ஏற்கனவே ஸ்வீட் செய்து பார்த்து இருந்தீங்கன்னா புரிஞ்சுடும்} நெய் தடவிய தட்டில் பரப்பி கத்தியால பர்பியாக வெட்டி வைங்க.

கன்னி ராசி படத்துல கவுண்டமணி சொல்வாரே "டேய் உங்கக்காக்கு சூப் வைக்க தெரியும்ங்கறதே நீ வந்தப்பரம் தான் தெரியும் " அப்படின்னு மச்சான் பிரபு கிட்ட அது மாதிரி ...
எனக்கு இதெல்லாம் தெரியும்ன்னு என் வீட்டுக்காரருக்கு தெரியாது. பாவம் அவங்களுக்கு இஞ்சி மரப்பான்னா ரொம்ப பிடிக்கும் . நானும் செய்யணும் ஒரு தடவை இந்த பதிவ படிச்சுட்டு .....

Wednesday, March 21, 2007

சாவியைத் தொலைத்துவிடாதீர்கள்

அந்தக்காலத்தில் நம் முன்னோர்கள் இன்ன உணவு இன்ன தன்மையுடையது என்பதை உணர்ந்து உடல்நலனில் கவனமாக இருந்திருக்கின்றனர். இப்போது பலருக்கு என்ன உணவுப்பொருள் என்ன கலோரி என்று கவனமிருக்கிறது உடல் பருமனாகிவிடும் என்ற பயத்தின் காரணமாக , ஆனால் அதில் என்ன
சத்து இருக்கிறது அதை எப்போது சேர்ப்பது எப்போது சேர்க்காமல் இருப்பது என்பது தெரிவதில்லை. அவசரயுகத்தில் எளிதாக சமைப்பதையும் , உடலுக்கு ஒன்று என்றால் மருத்துவர் மட்டுமே கதி என்று இருப்பதையும் இளந்தலைமுறை பழகிக்கொண்டிருந்தால் நம் பாரம்பரிய பெருமைகள் பழம்பெருமைகளாகி அழிந்து விடும்.

இங்கே சில பொருட்களின் தன்மைகள்

உடற்சூட்டை தணிப்பவை
பச்சைப்பயிறு , மோர் , உளுந்தவடை , பனங்கற்கண்டு , வெங்காயம் , சுரைக்காய் , நெல்லிக்காய் , வெந்தயக்கீரை , மாதுளம் பழம் நாவற்பழம் , கோவைக்காய் , இளநீர்

ருசியின்மையைப் போக்குபவை

புதினா , மல்லி , கறிவேப்பிலை , நெல்லிக்காய் , எலுமிச்சை , மாவடு , திராட்சை , வெல்லம் , கருப்பட்டி , மிளகு , நெற்பொறி

சிவப்பணு உற்பத்திக்கு

புடலைங்காய் , பீட்ரூட் , முருங்கைக்கீரை , அவரை , பச்சைநிறக் காய்கள் , உளுந்து , துவரை , கம்பு , சோளம் கேழ்வரகு ,பசலைக்கீரை

மருந்தை முறிக்கும் உணவுகள்

அகத்தி , பாகற்காய், வேப்பிலை , நெய் , கடலைப்பருப்பு , கொத்தவரை , எருமைப்பால் . சோம்பு , வெள்ளரிக்காய்

விஷத்தை நீக்கும் உணவுகள்

வெங்காயம் , பூண்டு , சிறுகீரை , வேப்பிலை , மிளகு , மஞ்சள் , காயம்

பித்தம் தணிப்பவை

சீரகம் , கருப்பட்டி , வெல்லம் , சுண்டைவற்றல் செவ்விளநீர் , அரைக்கீரை , எலுமிச்சை

இன்னும் எத்தனையெத்தனையோ இருக்கும் நான் எழுதியவை சில மட்டுமே. அவரவர் வீட்டில் இருக்கும் வயதானவர்களிடம் கேட்டு மேலும் தெரிந்து கொள்ளுங்கள் . அனுபவத்தில் சிறந்த வயதானவர்களின் பொக்கிஷத்தை மூடி சாவியைத் தொலைத்து விடாதீர்கள் .
பாட்டி வைத்தியம் என்று சொல்லி கேலி செய்யாதீர்கள்.
சுக்கு கஷாயம் , சீரக கஷாயம் போடுவதற்கு 5 நிமிடமும் குறைந்த அளவு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது . அதற்கு பதில்
150 ரூ பீஸ் + 100ரூ மருந்தும் செலவழிப்பது ஏன் ?

Monday, March 5, 2007

விதவிதமாய் வித்தியாசமாய்

கலர் கலராய் தோசை செய்து எங்களை அம்மா அசத்துவார்கள். காயைக் கண்டாலே நாங்க ஓடுவோம் . [அது தானே இப்போ கண்ணாடி B-( ] அம்மாவும் குறுக்கு வழி கண்டு பிடித்து வைத்திருப்பார்கள். விதவிதமாய் வித்தியாசமாய் தோசைகள்.
பிங்க் கலர் தோசை

பீட்ரூட் மற்றும் கேரட் இரண்டையும் துருவி எடுத்துக் கொண்டு கொஞ்சம் வெங்காயம் வேண்டுமென்றால் பச்சை மிளகாயும் போட்டு வதக்கிக் கொள்ளுங்கள். அதனை தோசை மாவில் போட்டு பிங்க் கலர் தோசை செய்யலாம்.

பச்சை கலர் தோசை

முளை கட்டிய பச்சைபயிறை கொஞ்சமாக அரைத்துக் கொள்ளுங்கள் . இத்துடன் வெங்காயத்தாள் இரண்டைப் பொடியாக நறுக்கி அதனை தோசை மாவுடன் சேர்த்து கலக்கி பச்சை கலர் தோசை செய்யலாம். மாவு இல்லாமல் இதனை கெட்டியாக அடை போலவும் செய்யலாம்.

சிகப்பு கலர் தோசை

கோதுமை ரவையை ஊற வைத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அதில் மூன்று தக்காளியையும் அரைத்து ஊற்றி
சிகப்பு கலர் தோசை செய்யலாம்.

மஞ்சள் கலர் தோசை

கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து கரைத்து மஞ்சள் கலர் தோசை செய்யலாம்.

சாப்பிட அடம் பிடிக்கும் என் பெண்ணுக்கு அவள் அத்தை விதவிதமான வடிவத்தில் சுட்டு தருவாள்.

இன்றைக்கு என்ன வடிவம் வேண்டும் ஆர்டர் எடுக்கிறேன் என்பாள். இவளும் ம்..லேடர் முடியுமா? என்பாள். ஓகே மேடம்.
லேடர் தோசை ஒன்னு ஆர்டர் என்பாள்., பென்சில் நோட்டோடு.
அப்புறம் ரெண்டு கோடு அருகில் வரைந்து நடுவில் இணைக்கும்
சிறு சிறு கோடுகளுடன் லேடர் அதாங்க ஏணி ரெடியாகும்.

சில நாள் சன் தோசை, மூன் தோசை, ஸ்டார் தோசை,
டார்ட்டாய்ஸ் தோசை கூட தயாராகும். எப்படியோ மாவு பணியாரமாகனும்.. குழந்தை சாப்பிடனும். அவ்வளவு தாங்க.


என்ன இன்னைக்கு உங்க வீட்டுல என்ன கலர் என்ன வடிவத்தில் தோசை செய்யப் போறீங்க?
யோசிக்க ஆரம்பிச்சாச்சா?

Monday, February 26, 2007

இனிப்புடன் துவங்குகிறேன்

வளர் பிறை சுபமூகூர்த்தம். நல்ல நாளில் ஒரு இனிப்புடன் "சாப்பிட வாங்க" தளத்தில் எழுதத் தொடங்குகிறேன். முன்பே சொல்லிக்கொள்கிறேன் , நான் சமையலில் நிபுணி அல்ல , தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

பாதாம் முந்திரி பர்பி [சரியாக வரவில்லை என்றால் பாதாம் முந்திரி அல்வா]

எளிமையானதும் சரியாக வரவில்லை என்றால் பிரச்சனை இல்லாததுமானவற்றை மட்டுமே நான் முயற்சிப்பது .
ஆகவே எந்த பண்டிகையானாலும் இதுவே எங்கள் வீட்டு
சிறப்பு இனிப்பு.

தேவையானவை:
கண்டென்ஸ்ட் மில்க் டின் 1,
பாதாம் 100 கிராம்,
முந்திரி 100 கிராம்,
ஜீனி 2 டம்ளர்,
நெய் அரை டம்ளர்.

செய்முறை: பாதாம் மற்றும் முந்திரியை ஊறவைத்துக் கொள்ளவும். ஊறிய பாதாமின் தோலை உரித்து எடுக்க வரவேண்டும் . தோல் உரித்த பாதாம் மற்றும் முந்திரியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். அடிகனமான இருப்பு சட்டியில் அல்லது நான்ஸ்டிக் பாத்திரத்தில் இந்த விழுதோடு மற்ற அனைத்தையும் ஊற்றிக் கிளறவும். தீயை கொஞ்சம் நேரத்திற்கு பிறகு சுருக்கியே வைப்பது நல்லது அடிபிடிக்கும் வாய்ப்புள்ளது. கைவிடாமல் கிளற வேண்டி இருக்கும். துணைக்கு யாராயாவது வேண்டுமானால் கூட்டிக்கொள்ளவும்.


பாத்திரத்தில் ரொம்பவும் ஒட்டுவது போல் தோன்றினால்
இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளவும். இந்த கண் அளவு காதளவு சொல்லும் பெரியவர்கள் சரியான படி அளவு சொல்லுவதில்லை. நாங்கள் கண்ணளவில் போடுவோம் அளவெல்லாம் கேட்டால் எப்படி என்பார்கள் . அவ்வப்போது இப்படி கைக்கு கிடைத்ததை சேர்த்து மாவை பணியாரமாக்குவது வழக்கம்.


புதிதாக செய்பவர்கள் கவனமாக இருக்கவும். கொப்பளித்து வரும் கையில் தெளிக்க வாய்ப்புண்டு. நீளமான கரண்டி கொண்டு கிளறவும். கற்றாழை செடியை வீட்டில் வளர்த்தீர்கள் என்றால் இப்படி பட்ட நேரத்தில் உடைத்து அதன் உள்ளிருக்கும் பசையைத் தடவினால் கொப்பளிக்காது . எரியாது . பின்னாளில் தடமும் தெரியாது .


முன்பே சொல்ல விட்டுப் போய்விட்டது கிளறத் தொடங்கும் முன்னேயே ஒரு தட்டில் நெய்தடவி வைத்திருக்கவும் கிளறியதைக் கொட்ட தேவைப்படும் . ஒரு சொட்டு தட்டில் ஊற்றிப்பார்த்தால்
உடனே கெட்டியாக மாறும் . கொதித்து வெள்ளை வெள்ளை முட்டைகளாக வரத்தொடங்கும் . பாத்திரத்தில் ஒட்டாமல் வர தொடங்கும். இது சிலமுறை செய்து பார்த்தால் பக்குவம் தெரிந்துவிடும். [அல்வா வேண்டும் என்றால் சிறிது முன்னேயே இறக்கவும்.]


நெய் தடவிய தட்டில் கொட்டவும் . சிறிதே ஆறிய வுடன்
கட்டங்களாக வெட்டவும். இனிப்பு தயார். அலங்காரத்தில் விருப்பமுள்ளவர்கள் ஆறும் முன் பாதாம் முந்திரியை
பதிக்கலாம். ஆறிய வுடன் மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். அல்வா பதமாக இருந்தால் கவலை வேண்டாம் வீட்டில் உள்ளவருக்கு ஸ்பூனால் கொடுங்கள். அக்கம்பக்கத்தில் பகிர்ந்து கொள்ள உருளையாக செய்து பட்டர் பேப்பரில் சுருட்டவும் . இல்லை பர்பி தான் வேணும் என்றால் அல்வாவை மீண்டும் அடுப்பில் வைத்து கிளறிப் பார்க்கவும் . சிறிதே கெட்டி பதம் குறைகிறதென்றால் ஃப்ரீசரில் வைத்துப் பார்க்கவும் . நன்றாக வந்தால் "சாப்பிட வாங்க" பகுதிக்கு பார்சல் அனுப்பிவைக்கவும்.
Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines